திங்கள், 8 ஜனவரி, 2018

கோவையின் ஆறாத வடு

இவர்கள் தான் தோழர்கள் .
இவர்கள் தான் தோழர்கள் .

ஜனவரி 8.
கோவை வரலாற்றில்
முக்கியமான நாள்.
இந்த நகரம் அதிர்ந்த,
இந்த நகரம் கண்ணீரில்
நனைந்த நாள்.

அது. பஞ்சாலைகள் கொடி கட்டிப் பறந்த காலம். புகழ் பெற்ற பஞ்சாலைகளில்  ரங்கவிலாஸ் மில்லும் ஒன்று.

1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் பெரும் நூற்பாலையாக வளர்சியடைந்தது.

ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும்மிக்க  இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர்கள் .

15 மணி நேரம் உழைப்புக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய்தான் . ஏனென்று கேட்டால்
பஞ்சாலைப் பாதுகாவலர்கள் சங்கம் என்ற பெயரில்ஆலை முதலாளிகள்  வைத்திருந்த  ரவுடிகளின் தாக்குதல் அட்டகாசங்கள் . பெண் தொழிலாளிகளுக்குப் பாலியல் சீண்டல்கள், சவுக்கடி.. 

இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டு  எதிர்த்து,  சங்கம் கட்டி, துப்பாக்கிகளுக்கு அஞ்சிடாமல் பல்வேறு போராட்டங்களை நெஞ்சுரத்தோடு நடத்தினார்கள் தொழிலாளிகள்.

ராஜி,இதில் மிகமுக்கியமான பெண் போராளி..

பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக,  தனிப்பட்ட முறையில்  பெண்களைத் திரட்டி துணிச்சலோடு அவ்வப்போது மேஸ்த்திரிகளைப் பொடையெடுத்துக் கொண்டிருந்தவர்.

1940களின்  பிற்பகுதியில் ஒரு நாள்.

கும்மிருட்டு தொடங்கும் நேரம் ...

ரங்கவிலாஸ் மில்லிலிருந்து வேலை முடிந்து  ராஜி திருப்பிக்கொண்டிருக்கிறாள். 
கூட வந்த பெண்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பாதையில் திரும்பியாயிற்று.   சாலை வெரிச்சோடிவிட்டது..  குதிரைவண்டி ஒன்று அவளுக்குக் குறுக்கே வந்து நிற்கிறது. நான்கைந்து உருவங்கள் அதிலிருந்து சடாரெனக் குதிக்கிறது. சுதாரித்து நிற்பதற்குள் கைகளும்   வாயும் கட்டப்பட்டுகிறது. போராடிச்சோர்ந்துவிட்ட ராஜியை அரசூருக்கு அருகில் ஒரு சோளக்காட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே ராஜி   கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் குற்றுயிராக்கப்படுகிறாள்.

 சின்னியம்பாளையத்துக்கு எப்படியோ    இந்தத் தகவல் போய் சேர்ந்து விடுகிறது.  ஆவேசமுற்ற அந்த நான்கு இளம் தொழிலாளிகளும் பொன்னானை தேடிப்பிடித்து   அடித்துத்துவைத்து நொங்கெடுக்கிறார்கள்.
சோர்ந்து  சாய்ந்த பொன்னானை  பாதிக்கப்பட்ட பெண்கள் விடவில்லை.   சூழ்ந்துகொண்டு ஆத்திரம் தீரும்மட்டும் புரட்டியெடுக்கிறார்கள்.
இறுதியில் பொன்னான் இறந்துபோகிறான்

தங்கள் மில்லில் உரிமைகேட்டு போராடிக்கொண்டிருந்த, மற்ற மில் தொழிலாளிகளுக்கு ஆதர்ச சக்தியாக இருந்த இந்த துடிப்புமிக்கதொழிலாளிகளை எப்படியாவது பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்த   மில் நிர்வாகம், இந்த   வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது.    சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சாந்தபிள்ளையை
உரிய மரியாதையோடு அழைத்துப் பேசுகிறது.    நால்வரின் மீது வழக்கு பாய, கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

வழக்கு விசாரணைக்கு வருகிறது .  ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்து  நீதிமன்றத்தை ஸ்தம்பிக்கவைக்கிறார்கள் . கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் புகழ்பெற்ற  பல வழக்கறிஞர்களை வைத்து நால்வரையும்  விடுவிக்கக் கடுமையாகப் போராடுகிறது

வழக்கு, கோவையைத்தாண்டி , சென்னையைதாண்டி , டில்லியைத்தாண்டி    லண்டன் கவுன்சில் முடிவுக்கு போகிறது .
அங்கேயும் கம்யூனிஸ்ட் கட்சி
இங்கிலாந்தைச் சார்ந்த உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் பிரிட்டை வைத்து வாதாடிப்பார்க்கிறது.

ஆனால்,

உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய, பெண் தொழிலாளிகள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராக போராடிய, சின்னியம்பாளையம் தொழிலாளிகளுக்கு தூக்குதண்டனையைத் தீர்ப்பாக அறிவிக்கிறது லண்டன் கவுன்சில்.

மில்தொழிலாளிகளின் கதறலும் கண்ணீரும் கோவையை மூழ்கடிக்கிறது.

 கொந்தளிப்பான சூழ்நிலையில் நான்கு தோழர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியின்   பொதுச்செயலாளர் பி சி ஜோஸி மற்றும் பி ராமமூர்த்தி, கே ரமணி ஆகிய தலைவர்கள் சிறைக்குள்  சென்று சந்திக்கிறார்கள். 

உணர்வை க்கட்டுப்படுத்தமுடியாமல்  தலைவர்கள் கலங்குகிறார்கள்    ,''வழிகாட்டும் நீங்கள் கண்ணீர் சிந்தக்கூடாது  'இன்குலாப் ஜிந்தாபாத்! லால் சலாம்! என்று சிறையதிர முழங்கி அவர்களை தேற்றி அனுப்புகிறார்கள்.

1946-ம்ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு  ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும்தூக்கிலிடப்பட்டனர்.

 பெண்களின்ஓலமும் கூக்குரலும் கண்ணீரும் வீதிகள்தோறும் கேட்டது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் கொந்தளித்து எழுந்தார்கள்.

அணி அணியாய் ஊர் ஊராய்  போர்க்கோலம்பூண்டு நின்றார்கள். கண்ணில்கண்ட அதிகாரமட்டங்களை அடித்து நொறுக்கினார்கள்.

தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அமைதிவழியில் ஒரு  பிரம்மாண்டமானஅணிவகுப்பால் நகரத்தை அதிரச்செய்தார்கள்.

அதே அணிவகுப்பில் நால்வரையும் சுமந்துகொண்டு சின்னியம்பாளையம் வரை நடந்தே சென்றார்கள்.

அவர்களின்கடைசி ஆசைக்கு மரியாதை அளித்து சின்னியம்பாளையத்தில் ஒரே இடத்தில் நால்வரையும் அடக்கம்செய்துவிட்டு ஆறாகப்பெருகிநின்றார்கள்

இன்னும் அந்த சமாதி அங்கேதான் இருக்கிறது. நகரத்திலிருந்து எட்டிவிடும்தூரம்தான்.

தொழிற்சங்கப் போராளிகளுக்கு வீரவணக்கம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக